வரதட்சிணை வேண்டாம் என்று சொன்ன மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பெண் வீட்டார்
வரதட்சிணையே வேண்டாம் என்று சொன்ன மருமகனின் பெருந்தன்மையை மெச்சிய பெண் வீட்டார், அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
பொதுவாக வரதட்சிணை வேண்டாம் என்று சொன்னால், பெண் வீட்டார் சும்மா விடுவதில்லை, வீடு வாங்கிக் கொடுப்பது, காரை பரிசளிப்பது போன்று எதையாவது கொடுத்து தங்களது பெருந்தன்மையைக் காட்டி விடுவார்கள்.
ஆனால், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சூர்யகாந்த் பாரிக் (30), தனது மாமனார் மாமியாரிடம் வரதட்சிணை வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரது மனதை புண்படுத்த விரும்பாத அவரது மாமனார்-மாமியார், புதிய யோசனை ஒன்றை செய்தனர்.
அதன்படி, அவரது திருமணத்தன்று ஆயிரக்கணக்கான புத்தகங்களை பரிசளித்தனர் பெண் வீட்டார். ஆங்கில ஆசிரியரும், புத்தகப் பிரியருமான சூர்யகாந்துக்கு இது உண்மையில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இது குறித்து மணப்பெண் பிரியங்கா பேஜ் கூறுகையில், என்னைப் போலவே அவரும் புத்தகப் பிரியர் என்பதில் எனக்கு அதீத மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
இன்ப அதிர்ச்சி குறித்து பேசிய சூர்யகாந்த், எனது வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை அமைக்க விரும்பியிருந்தேன். அது தற்போது நடந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் அந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப் போகிறேன் என்கிறார் பெருமிதத்தோடு.