புது தில்லி: காங்கிரஸ் மக்களவைத் தலைவராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி அதிர் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி அதிர் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய் காலை தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டார். இறுதியில் அதிர் சவுத்ரியின் பெயரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பின்னர் மக்களவை செயலருக்கு காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் அதிர் சவுத்ரி கட்சியின் மக்களவை தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த முறை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக தற்போது இந்த சூழல் எழுந்துள்ளது.