பாலாகோட் ரகசியம்: செயற்கைக்கோள் படம், ஜெய்ஷ் ஆடியோ, இத்தாலி நிரூபர் சொல்லும் சேதி இதோ

பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலாகோட்டில் இருந்த  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்
பாலாகோட் ரகசியம்: செயற்கைக்கோள் படம், ஜெய்ஷ் ஆடியோ, இத்தாலி நிரூபர் சொல்லும் சேதி இதோ
Updated on
2 min read

பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலாகோட்டில் இருந்த  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.

இந்திய விமானப் படை தளபதி பிஎஸ் தனோவா நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளை துல்லியமாக தாக்குவதில் மட்டுமே இந்திய விமானப் படை கவனம் செலுத்தும். இலக்கு தாக்கப்பட்டதா, அல்லது குறி தவறியதா என்பதை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாத பயிற்சி முகாமில் எத்தனை பேர் இருந்தார்கள்? எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கணக்கிட முடியாது என்றும் பதிலளித்திருந்தார்.

தாக்குதலை நடத்திய இந்திய விமானப் படை தளபதி இவ்வாறு கூற, இந்திய விமானப் படை ஏர் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர் பேசுகையில், ஜெய்ஷ் பயங்கரவாத முகாம் தாக்கப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறியதோடு, தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பதை இப்போதே கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்திருந்தார்.

அதிரடித் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாஜக பிரசாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இவ்வாறு கூறியிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பிறகு பாலாகோட் தாக்குதலில் எத்தனை பேர்தான் உயிரிழந்திருப்பார்கள் என்பதை அறியவே முடியாதா? செயற்கைக் கோள் வசதி வந்த பிறகும் அது சாத்தியமில்லையா என்ற கேள்விக்குக் கிடைத்த பதில்கள் சில..

ஆஸ்திரேலியாவின் சர்வதேச சைபர் பாலிசி சென்டர், இந்திய அரசுக்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளது. அதாவது, அதிரடித் தாக்குதல் வெற்றி என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பிப்ரவரி 27ம் தேதி செயற்கைக் கோள் புகைப்படங்களைப் பார்வையிட்டதில், தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் எந்த கட்டடச் சேதமோ, பாதிப்போ ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தாக்குதலை ஒப்புக் கொள்ளும் ஜெய்ஷ்
பிப்ரவரி 28ம் தேதி ஜெய்ஷ் பயங்கரவாதிகளுடனான ஆடியோ பதிவைக் கேட்டதில் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடந்திருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜிஹாத்துக்காக பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு நடுவே இந்திய விமானங்கள் குண்டுகளை வீசியதாக அந்த ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எத்தனை பேர்தான் இறந்திருப்பார்கள்?
இத்தாலியைச் சேர்ந்த செய்தியாளர் பிரான்செஸ்கா மரினோ கூறுகையில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் 40 - 50 பேர்  கொல்லப்பட்டதாகவும், 35 - 40 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையின் தாக்குதல் நடந்த பிறகு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. அங்கு சென்ற மருத்துவ ஊழியர்களின் செல்போன்கள் பிடுங்கி வைக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து சுமார் 35 உடல்கள் அகற்றப்பட்டன. அதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த 12 இளைஞர்களும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கலோநெல் மற்றும் மற்றொரு பாதுகாப்பு படை அதிகாரியும் கூட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com