புது தில்லி: லட்சக்கணக்கான தெலுங்கு தேச ஆதரவு ஓட்டுக்களை நீக்கிய பிகார் கொள்ளைக்காரன் என்று சமீபத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்துள்ள, பிரபல தேர்தல் செயல்திட்ட வடிவமைப்பாளரை சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திங்களன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சந்திரசேகர ராவ் தவறான அரசியல் செய்கிறார். அவர் காங்கிரஸில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்தும் எம்.எல்.ஏக்களை அபகரிக்கிறார். பிகார் கொள்ளைக்காரனான பிரஷாந்த் கிஷோர் ஆந்திராவில் லட்சக்கணக்கான தெலுங்கு தேச ஆதரவு ஓட்டுக்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். அவர் சைபர் குற்றத்தை செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார். முன்னதாக அவர் இதேமாதிரியான குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது அவர் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரஷாந்த் கிஷோர் இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல தேர்தல் செயல் திட்ட வடிவமைப்பாளராவார். அவர் மோடிக்காக 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலிலும், பின்னர் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிகரமாக பிரசார விளமபரங்களை முன்னெடுத்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாருக்காக செயல்பட்ட அவர், 2018-ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தார்.
சந்திரபாபுவின் குற்றச்சாட்டுக்கு பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாயன்று பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நெருங்கும் தோல்வி பயமானது அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களையும் ஆட்டி வைத்து விடும். எனவே சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை. பிகார் மக்களுக்கு எதிரான உங்களது பாரபட்சத்தை வெளிக்காட்டும் வார்த்தைகளை பயன் படுத்துவதை விட்டு, ஆந்திர மக்கள் ஏன் உங்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.