ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் ஃபானி புயல்: அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து!

உச்ச உயர் தீவிர புயலாக உருமாறியிருக்கும் ஃபானி புயல் ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையை கடக்கும் ஃபானி புயல்: அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து!
Updated on
1 min read


புவனேஸ்வர்: உச்ச உயர் தீவிர புயலாக உருமாறியிருக்கும் ஃபானி புயல் ஒடிஸாவில் நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் வடக்கு - வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்புர் - சந்த்பாலிக்கு இடையே நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்றும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 170 - 180 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும், அவ்வப்போது இது 200 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 14 கடற்கரை மாவட்டங்கள் உச்சகட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கடற்கரையோர மாவட்டங்களில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

28 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் ஒடிஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கியப் பிறகு மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர் உதவியும் கோரப்பட்டுள்ளது.

புரியில் இருந்து 570 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கும் ஃபானி புயலால், ஒடிசாவின் தெற்குக் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 4ம் தேதியும் பல்வேறு பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்றும் மே 2ம் தேதி கஜபதி, புரி, குர்தா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மே 3ம் தேதி 25 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றால் பறக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, மரக்கிளைகளை வெட்டுவது போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.

தனியார் வானிலை ஆய்வாளர்கள் அளித்திருக்கும் தகவலில், மேற்கு வங்கத்தைக் கடக்கும்போதே ஃபானி புயல் வலுவிழந்துவிடும் என்று கூறியுள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதற்கிடையே மீட்புப் பணிகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவத் துறையினருக்கு அடுத்த 15 நாட்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com