

வாஜ்பாயிக்கு முந்தைய அரசுகளுக்கு தேசப் பாதுகாப்பை உறுதி செய்வதில் திராணி இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முதன்மையாக பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவ்வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா தொகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நம் நாடு 'ஆபரேஷன் சக்தி' அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. அதற்காக கடுமையாக உழைத்த, நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். 1998-ஆம் ஆண்டு நடந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்துக்கு தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட வலிமையான அரசியல் நிலைப்பாடு தான் முக்கிய காரணம்.
அதுபோன்ற வலிமையான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் நம் நாட்டில் ஏராளம். ஆனால், வாஜ்பாயிக்கு முந்தைய அரசுகளுக்கு அதற்கான திராணி இல்லை. தேசப் பாதுகாப்பு முக்கிய என நினைப்பவர்களால் தான் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள் சாத்தியமாகும். அப்போதுதான் அணுஆயுதச் சோதனைகள் மேற்கொள்ளும் தைரியம் இருக்கும்.
இந்நிலையில், எதிர்கட்சிகள் அனைத்தும் எனது சாதி குறித்து அறிய மிகவும் ஆவலுடன் உள்ளன. இப்போது நான் கூறுகிறேன், எனக்கு ஒரேயொரு சாதி தான். அது இந்நாட்டைச் சேர்ந்த அனைத்து ஏழைகளின் சாதி தான் என்னுடையதும். ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதி தான் என் சாதியும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.