இந்த தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு முதல் முறை வாக்காளர்களுக்கு இந்த பாதிப்பு இருக்காம்! 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு முதல் முறை வாக்காளர்கள், தாங்கள் வாக்களிப்பதில் எதன் மூலம் பாதிப்பு அடைகிறார்கள் என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன
இந்த தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு முதல் முறை வாக்காளர்களுக்கு இந்த பாதிப்பு இருக்காம்! 
Updated on
1 min read

புது தில்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு முதல் முறை வாக்காளர்கள், தாங்கள் வாக்களிப்பதில் எதன் மூலம் பாதிப்பு அடைகிறார்கள் என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. 

தற்போது நாடு முழுவதும் பதினேழாவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலானது ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் ஏறத்தாழ 15 கோடி பேர் முதன் முறையாக தங்களது வாக்கினைச் செலுத்துகிறார்கள்.

இந்த வாக்காளர்கள் தங்களுக்கு உரிய தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சமூக ஊடகங்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பாக, தில்லியைச் சேர்ந்த ஏ.டி.ஜி ஆன்லைன் எனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமானது விரிவான ஆய்வொன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்ட சுமார் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.   இந்த ஆய்வின் மூலம் கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவையாவன பின்வருமாறு:

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கினைச் செலுத்தும் முதல் முறை வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர், சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு கிடைக்கும் அரசியல் தொடர்பான செய்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த 15 கோடி முதல் முறை வாக்காளர்களில் ஏறக்குறைய பாதிபேருக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான செய்திகள் சென்று சேர்கின்றன   

சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான செயல்பாடுகளின் அளவானது 2014-ஆம் ஆண்டு தேர்தலை விட, இம்முறை அதிகமாக உள்ளது.

15 கோடி முதல் முறை வாக்காளர்களில் 30% பேர் இத்தகைய அரசியல் செய்திகளில் ஆர்வம் காட்டுகின்றனர்; பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்களில் 80% பேருக்கு செய்திகள் சமூக ஊடகங்களின் மூலம் மட்டுமே சென்று சேர்க்கின்றது. மீதமுள்ள 20% பேர் நாட்டு நடப்புகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இவ்வாறு சமூக வலைதள தாக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் 50% திற்கும் அதிகமானோர்   25 வயதிற்கும் குறைவானவர்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 40% பேர் அரசியல் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தினமும் பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், ஷேர் சாட், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் ஆகிய ஐந்தில் ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com