இந்திய ஜனநாயகத்தைக் காக்க தங்களது இன்னுயிரை பணயம் வைத்தக் குழுவினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் ஊழியர் குழுவினர் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்களது இன்னுயிரைப் பணயம் வைத்த பயங்கரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய ஜனநாயகத்தைக் காக்க தங்களது இன்னுயிரை பணயம் வைத்தக் குழுவினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்
Updated on
2 min read


குவகாத்தி: அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் ஊழியர் குழுவினர் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்களது இன்னுயிரைப் பணயம் வைத்த பயங்கரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் பணியாற்றிவிட்டு நேற்று இரவு தங்களது வீடுகளுக்குத் திரும்பிய குழுவினர், கடுமையான பசி, தாகம், உடல் நலக் குறைவோடு வந்து சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தியா - சீனா எல்லையில் உள்ள இந்திய கிராமத்துக்குள் தேர்தல் பணிக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

தேர்தல் பணிகள் முடிவடைந்து, இவர்கள் தங்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வரும் என்று கடந்த 19 நாட்களாகக் காத்திருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக எந்த ஹெலிகாப்டரும் வரவில்லை. இறுதியில் உணவோ, குடிநீரோ இல்லாமல் கிராமத்திலேயே தங்கியிருக்க முடியாத குழுவினர், கால்நடையாக வீடு வந்து சேர முடிவு செய்தனர்.

மிகக் கொடும் விஷப் பூச்சிகளையும், ரத்தத்தைக் குடிக்கும் அட்டைகளையும் கொண்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் கடந்த 3 நாட்களாக நடந்து வந்து கொண்டிருந்த தேர்தல் குழுவினரை அருணாச்சலப் பிரதேச காவல்துறை பத்திரமாக மீட்டது. 

க்ரா டாதி மாவட்டத்தில் ஏப்ரல் 27ம் தேதி நடந்த மறு வாக்குப்பதிவுக்காக ஏப்ரல் 23ம் தேதி அப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த தேர்தல் பணியாளரகள், மே 16ம் தேதி தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

தங்களது பயணம் மற்றும் அந்த கிராமத்தில் தங்கியிருந்த சூழ்நிலை குறித்து அவர்கள் கூறுகையில், வெறும் ரேஷன் அரிசியும், சில தாவரங்களை சமைத்தும் சாப்பிட்டு வந்தோம். அந்த கிராமத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு. கடைகளும் கிடையாது. சிலர் உப்பை ரூ.250க்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

எங்களது வாழ்நாளிலேயே நாங்கள் சந்தித்த மிகப்பெரிய துயரமாக இந்த பயணம் அமைந்தது. 8 மலைகளை அடர்ந்த வனப்பகுதி வழியாகக் கடந்து வந்தோம். ஏதேனும் ஆபத்து நேரிட்டாலும் காப்பாற்ற ஒருவரும் இல்லாத நிலையில் நாங்கள் அந்த 3 நாட்களும் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தோம்.

ஒவ்வொருவரையும் குறைந்தது 20 அட்டைப் பூச்சிகள் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. குடிக்க தண்ணீர் இல்லாமல் கொட்டும் மழையிலும் எங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தோம். இங்கு வந்து சேர்ந்ததும் பலரும் வீட்டில் இருந்து நேராக மருத்துவமனைகளுக்குத்தான் சென்றிருக்கிறார்கள். ஒருவர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வாக்குப்பதிவு நடந்து 25 நாட்களுக்குப் பிறகு, தேர்தல் குழுவினரால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நல்லவேளை வாக்கு எண்ணிக்கைக்கு முன்கூட்டியே வந்துவிட்டது..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com