ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசா சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, பதற்றம் நீடித்து வந்த காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புல்வாமா மாவட்டம், டட்சாரா கிராமத்தில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவை வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில், குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் பதற்றநிலை நீடித்து வந்ததால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் பதற்றம் தணிந்ததால் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இயல்பு நிலையை அடைந்தது.
வாராந்தோறும் கூடும் சாலையோர சந்தை பகுதி (லால் செளக்கில் உள்ள டிஆர்சி செளக்-பாடாமலூ ஆக்ஸிஸ்) வழக்கம்போல இயங்கியது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு முற்றிலும் தளர்த்தப்பட்டதால் அனைத்துப் பகுதிகளிலும் இயல்புநிலை திரும்பியுள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









