பெங்களூரு: கர்நாடக அரசியலில் பல்வேறு சலசலப்புகள் நிலவும் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் பாஜக மூத்தத் தலைவர்களை சந்தித்துள்ளது மேலும்பரபரப்பைக் கூட்டுகிறது.
எஸ்.எம். கிருஷ்ணாவின் வீட்டில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்கிஹோலி, டாக்டர் சுதாகர் சென்றிருந்த போது, அங்கே எடியூரப்பாவும் வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சந்திப்பு எதிர்பாராமல் நடந்ததாக இரு தரப்பிலும் கூறப்படுகிறது.
இது பற்றி எடியூரப்பாவுடன் வந்த பாஜக எம்எல்ஏ அஷோக் கூறுகையில், நாங்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் எதுவும் பேசவில்லை. நாங்கள் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்துப் பேசவே அவரது வீட்டுக்கு வந்தோம். பாஜக மூத்தத் தலைவர்கள் கட்சி நிலவரம் குறித்து பேசினார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்களும், கிருஷ்ணாவைப் பார்க்க வந்துள்ளனர். அது கிருஷ்ணாவின் வீடு. அரசியல் கட்சியின் அலுவலகம் அல்ல. இது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் கூறுகையில், எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கவே நாங்கள் வந்தோம். ஏன் என்றால் எங்கள் தலைவர் அவர்தான் என்று தெரிவித்தார். இதேப்போன்ற கருத்தையே மற்றொரு எம்எல்ஏ சுதாகரும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.