அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானி
புது தில்லி: அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானியாக பிளைட் லெப்டினன்ட் மோஹனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய விமானப் படை வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிளைட் லெப்டினன்ட் அலுவலர்களான பாவனா காந்த், அவனி சதுர்வேதி மற்றும் மோஹனா சிங் ஆகிய மூவரும் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர் விமான பயிற்சிக்கான அணியில் சேர்க்கப்பட்டனர்.
கடும் பயிற்சிகளுக்குப் பிறகு கடந்த வாரம் பாவனா காந்த் மிக் 21 -பைசன் ரக விமானங்களை இயக்கும் பன்னிக்குத் தேர்வானார்.
தற்போது அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானியாக பிளைட் லெப்டினன்ட் மோஹனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மோஹனா சிங்கின் பயிற்சிகளில் வானத்தில் இருந்து வானில் இலக்குகளைத் தாக்குதல் மற்றும் வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குதல் உள்ளிட்டவையும் அடங்கும்.
அத்துடன் விமானத்தில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுதல், துப்பாக்கியால் சுடுதல் மற்றும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகளையும் மோஹனா மேற்கொண்டுள்ளார்.
அவர் இதுவரை மொத்தமாக எந்த தவறுகளும் இல்லாமல் 500 மணி நேரங்கள் வானில் பறந்துள்ளார். அதில் 380 மணி நேரங்கள் அதிநவீன ஹாக் Mk 123 ஜெட் போர் விமானத்தில் பறந்ததும் அடங்கும்.
இறுதியாக மேற்கு வங்கத்தில் உள்ள கலைக்குண்டா விமான தளத்தில் கடினமான நான்கு தொடர் விமான பறக்கும் பயிற்சிகளுக்குப் பின்னர் அவர் அதிகாரப்பூர்வமாக போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.