தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து இன்று இரவு முடிவு; 2 நாட்களில் புதிய அரசு: காங்கிரஸ் தலைவர் தகவல்!

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும், 2 நாட்களில் புதிய அரசு அமையும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 நவம்பர் 2019, 1:40 pm

DIN


மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும், 2 நாட்களில் புதிய அரசு அமையும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு சரத் பவார் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"பாஜகவும் சிவசேனையும் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் ஒன்றாக போட்டியிட்டது. அவர்கள், அவர்களது பாதைகளைத் தேர்வு செய்யவேண்டும். நாங்கள் எங்களது அரசியலை செய்வோம்" என்றார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், 

"குறைந்தபட்ச செயல்திட்டம் தொடர்பான ஆலோசனையுடன் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையும் இறுதி செய்யப்படவுள்ளது. தற்போது கட்சியின் தலைமை மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. அது இன்று இரவுக்குள் நிறைவடைந்துவிடும் என நினைக்கிறேன். அதன்பிறகு அரசு அமைப்பதற்கான முறைப்படியான நடவடிக்கைகள் அடுத்த இரண்டு நாட்களில் முடிக்கப்படலாம்" என்றார்.

இதனிடையே, சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இன்று சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், 

"மகாராஷ்டிராவில் நிலவும் சூழல் குறித்து சரத் பவார் சோனியா காந்தியிடம் விளக்கினார். இன்னும் ஓரிரு நாட்களில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் இதை முன்னெடுத்துச் செல்வது குறித்து தில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்" என்றார்.

எனவே, மகாராஷ்டிராவில் அரசு அமைவது குறித்த முடிவை விரைவில் எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.