சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் பேஸ்புக் பதிவுக்காக, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய பெண் ஊழியர் மீது கேராளாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் இந்திரா. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வநததாகத் தெரிகிறது.
சமீபத்தில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, 'அஸாமில் குடிமக்களாக இல்லாதவர்கள் அனைவரும் உடனடியாக அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆதார் மற்றும் ரேஷன் உள்ளிட்ட எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படக் கூடாது' என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து கேராளாவின் திரிசூர் மாவட்டம் கொடுங்காளூரில் செயல்பட்டு வரும் ''கொடுங்காளூர் ஊடக உரையாடல் மையம்' என்னும் அமைப்பைச் சார்ந்த விபின் தாஸ் என்னும் செயல்பாட்டாளர், கொடுங்காளூர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இ.பி.கோ பிரிவு 153 (A) மற்றும் கேரள காவல்துறை சட்டம் 120 (O) ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் இந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.