இஸ்ரோவின் தலைவர் சிவனின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்றும் அவைகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் -2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 48 நாட்கள் பயணத்திற்கு பின்னர், கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் பகுதியை அடைந்தது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரம், நிலவுக்கு மேலே 2.1 கிமீ தொலைவில் உள்ள போது, சிக்னல் கிடைக்காமல் போனது.
இந்த சமயத்தில், சிக்னல் கிடைக்கவில்லை என்று தழுதழுத்த குரலில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடியிடம் பேசும்போது கதறி அழுதார். உடனே பிரதமர், சிவனை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதுமட்டுமின்றி, சிவனுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கைலாசவடிவூ சிவன் என்ற அவரது பெயரிலும், இஸ்ரோவின் பெயரிலும் ட்விட்டரில் உள்ள சில கணக்குகளில் தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தது.
இதையடுத்து, இஸ்ரோ மற்றும் சிவனின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சிவனுக்கு இதுவரை தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இல்லை என்றும், அவரது பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.