அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், வெற்றுப் பேச்சு பேசாமல் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து அதை மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இதன்பிறகு உரையாற்றிய அவர்,
"காஷ்மீர் நம்முடையது என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் நாம் தற்போது அதை புதிதாக கட்டமைக்க வேண்டும். புதிய காஷ்மீர்தான் நம்முடைய உறுதிமொழியாக இருக்க வேண்டும். அங்கு மீண்டும் சொர்க்கத்தை உருவாக்க வேண்டும். எல்லையின் மறுபுறத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று நாம் வாக்குறுதியளித்துள்ளோம். அவர்களது கனவை நிறைவேற்றுவதை நோக்கி இந்த தேசம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் இன்று மனதார சொல்வேன்.
அங்கு புதிய சொர்க்கத்தை உருவாக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் காயங்களை நாம் ஆற்ற வேண்டும். தில்லியின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எண்ணி நாம் அனுதாபம் தெரிவிக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் நீண்ட காலமாக சிக்கிக் கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று தங்களது மனதை தயார்படுத்திவிட்டனர். அவர்களுக்கு வளர்ச்சியும், புதிய வேலைவாய்ப்புகளும் தேவை.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்கள் எங்களை விமரிசிக்கிறார்கள். அதுகூட பரவாயில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அவர்களுக்கே தெரியாமல் நாட்டின் எதிரிகளுக்கு உதவி வருகின்றனர்.
இதில், காங்கிரஸ் குழம்பிபோயுள்ளது என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அனுபவமிக்க அரசியல் தலைவர் சரத் பவாரும் நாட்டின் எதிரிகளுக்கு சாதகமான கருத்துகளைத் தெரிவிப்பது வேதனையளிக்கிறது. அவர் அண்டை நாட்டை நல்ல அரசு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அனைவருக்கும் கருத்துகள் கூற உரிமை இருக்கிறது. ஆனால், பயங்கரவாத ஆலை இருக்கும் இடம் எது என்பது மக்களுக்குத் தெரியும்.
ராமர் கோயில் குறித்து சிலர் வெற்றுப் பேச்சு பேசி வருகின்றனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் உச்சநீதிமன்றம் மீது மரியாதை இருக்க வேண்டும். அவர்கள் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்து, அதனை மதித்து நடக்க வேண்டும்" என்றார்.