சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க சிஐடி காவல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜீவ் குமார் முன்ஜாமீன் கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்து விட்டது. இதையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார். அவரது மனு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ராஜீவ் குமாரின் முன்ஜாமீன் மனுவை அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை விசாரித்தபோது, வழக்கு விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், அவர் விசராணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றும் சிபிஐ தரப்பு தெரிவித்தது. அதற்கு ராஜீவ் குமார் தரப்பு வழக்குரைஞர் மறுப்பு தெரிவித்ததுடன், ராஜீவ் குமார் தலைமறைவு நிதிமோசடியாளர் அல்ல; அவர் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 25-ஆம் தேதி வரை விடுப்பில் உள்ளார் என்று தெரிவித்தார். எனினும், ராஜீவ் குமாரின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி புகார்களை, ராஜீவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்தக் குழு தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், சில முக்கிய ஆதாரங்களை ராஜீவ் குமார் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ, ராஜீவ் குமாரைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முயன்று வருகிறது.
இந்த வழக்கில், அவரைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு ஏற்கெனவே 3 முறை சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.
ரோஸ்வேலி வழக்கிலும் ஆஜராகவில்லை: ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி வழக்கிலும், முக்கிய ஆதாரங்களை அழித்துவிட்டதாக ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. சிபிஐ முன் நேரில் ஆஜராவதற்கு அவர் அவகாசம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.