திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுலுக்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது வழக்கமான அமேதி தொகுதியுடன்,கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.
இதன் காரணமாக கேரள மாநில காங்கிரசார் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். அறிவிப்பு வெளியானதும் கேரளாவில் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி ராகுல் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.பி.சுனீர், வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார்.
இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுலுக்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அங்கு அவரை தோற்கடிக்க நாங்கள் அனைத்து வழிகளிலும் போராடுவோம். ராகுல் காந்திக்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.
தேசிய அளவில் இடதுசாரிகள் பா.ஜனதாவுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த முடிவு சரியான ஒன்றாகத் தெரியவில்லை. வயநாடு தொகுதிக்கு பதிலாக, பா.ஜனதா வலுவாக இருக்கும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் ஒரு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.