ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆர்எஸ்எஸ் பிரமுகரான உதவி மருத்துவர் மற்றும் அவரது தனி பாதுகாவலர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சந்திரகந்த் சர்மா என்பவர் உதவி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகராவார். செவ்வாயன்று இவர் தனது தனி பாதுகாவலருடன் மருத்துவமனையில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர்,சர்மாவின் தனி பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சந்திரகந்த் சர்மாவை சுட முயன்றனர். அப்போது நடந்த சண்டையில் தனி பாதுகாவலர் காயம் பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.