
நரேந்திர மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆவேசமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, ரே பரேலி தொகுதியில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனிருந்தார். இந்நிலையில், அவர் பேசியதாவது:
கடந்த காலங்களில் பலர் தங்களை சர்வ வல்லமை படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வரலாறு வேறு மாதிரியாக அமைந்தது. அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் தன்னை சர்வ வல்லமை படைத்தவராக கருதுகிறார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடந்தவுடன் அதன் உண்மை நிலை தெரிந்துவிடும்.
காங்கிரஸ் மீது தேவையற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை மோடி முன்வைக்கிறார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுத்தாலும், என்னை கைது செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் எழுப்பிய அந்த 4 கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கச் சொல்லுங்கள்.
ஒருவேளை என்னுடன் விவாதிக்க தயார் என்றால், மோடியால் எனது கண்களை கூட பார்க்க முடியாது. ரஃபேல் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்கிறது என்பதையாவது பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.