கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீட்டில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி அவரது மனைவி ஹசீன் ஜஹன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹஸ்பூர் அலி நகரிலுள்ள முகமது ஷமி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற ஜஹன் அங்கு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வெளியேறுமாறு ஷமியின் சகோதரிகள் கூறிய பின்னர், அவர் தனது குழந்தையுடன் சென்று ஒரு அறையில் உள்பக்கம் பூட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இரு தரப்பிலும் உள்ள பிரச்னைகள் குறித்து விசாரிக்க நேரமில்லாத சூழலில், அம்ரோஹா எனுமிடத்தில் உ.பி. போலீஸாரால் ஹசீன் ஜஹன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஹசீன் ஜஹன் கூறியதாவது: எனது கணவரின் வீட்டில் இருப்பதற்கு எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதனால் தான் நான் இங்கு வந்தேன். ஆனால், அங்குள்ள ஷமியின் சகோதரிகள் என்னிடம் தவறாக நடந்துகொண்டனர். இதற்கு போலீஸாரும் உடந்தையாக உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக என்னை கைது செய்தனர் என்று தெரிவித்தார்.