சுக்மா: மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சன்டையில் அண்ணன் போலீஸ் படையிலும், தங்கை அவருக்கு எதிராக மாவோயிஸ்ட் அணியிலும் சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. அங்கு சுக்மா மாவட்டம் அடிக்கடி சண்டைகள் நிகழும் பகுதியாகும். இந்த பகுதியைச் சேர்ந்தவர் வெட்டி ராமா. இவரது தங்கை வெட்டி கன்னி. இவர்கள் இருவருமே முதலில் மாவோயிஸ்டுகளாக இருந்தனர். ஆனால் ராமா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மாவோயிஸ்ட் அணியில் இருந்து விலகினார். பின்னர் 2018-ஆம் ஆண்டு போலீஸ் படையில் சேர்ந்தார்.
கடந்த 29-ஆம் தேதி அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது போலீஸ் அணியில் ராமா இடம்பெற்றிருந்தனர். அவருக்கு எதிராக நின்று சண்டையிட்ட மாவோயிஸ்டுகளுள் அவரது தங்கை வெட்டி கன்னி இடம்பெற்றுள்ளார். அந்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும் வெட்டி கன்னி சாமர்த்தியமாக தப்பித்துச் சென்று விட்டார்.
இது குறித்து வெட்டி ராமா கூறியதாவது
நாங்கள் இருவருமே முதலில் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்தான். ஆனால், மனமாற்றத்தால் நான் ஆயுதத்துடன் சரண் அடைந்து போலீசாக மாறிவிட்டேன். அதேபோல என் தங்கை கன்னியை நான் அங்கிருந்து வந்துவிடுமாறு பலமுறை கடிதம் எழுதி அழைத்தேன். ஆனால், இன்னும் வரவில்லை.
தொடர்ந்து தனது வாழ்க்கையை ஒரு போராட்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறாள். இது கடும் வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.