லக்னௌ: உத்தரபிரதேசத்தில் லாரி ஒன்று அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது மோதிய கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாகினார்கள்.
உத்தரபிரதேச தலைநகர் லக்னௌவிலிருந்து 170 கி.மீ. வடமேற்கே அமைந்துள்ளது ஷாஜகான்பூர். இங்கு செவ்வாயன்று லாரி ஒன்று முதலில் ஒரு டெம்போ மீது மோதியது. பின் அப்படியே ஒரு வேன் மீதும் மோதியது. இதில் வேன் சாலை அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் அதனைத் தொடர்ந்து லாரியும் வேன் மீது விழுந்தது. இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டனர்.
இந்த கொடூர விபத்தில் வேனில் சிக்கிய 6 முதல் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மருத்துவமனைக்கு காயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தைஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். லாரியின் கிளீனர் கைது செய்யப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின்படி இழப்பீடு வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.