தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று சாலை மார்க பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்துக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இந்த பிரசாரத்தின் நடுவில் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்த கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷ எழுப்பினர். இதையடுத்து பிரதமரை தாக்கி ராகுல் காந்தி பேசியதாவது,
"தேசத்தின் பாதுகாவலர் உத்தரப் பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்!
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் இதயம். உத்தரப் பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் (பிரியங்கா, ஜோதிர்ஆதித்யா சிந்தியா, ராகுல்) ஓயமாட்டோம்" என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. மக்களவைத் தேர்தலுக்கு முன் ராகுல் மற்றும் பிரியங்காவின் முதல் மாபெரும் பிரசாரமும் இதுதான்.