

முஸாபர் நகர்: இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல் ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல் ஏவாக இருப்பவர் விக்ரம் சைனி. அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கண்டனத்திற்கு ஆளாகுபவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அரசின் சார்பில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் ஒன்றில் பேசிய அவர், 'குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக தனியாக சட்டம் கொண்டு வரப்படும் வரை, ஹிந்து மக்கள் அதிக அளவில் குழநதைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று இவர் பேசியது சர்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சொல்பவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று விக்ரம் சைனி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முஸாபர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றும், தாங்கள் மிரட்டப்படுகிறோம் என்று கூறுபவர்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட வேண்டும்.
இந்திய நாட்டின் மதிப்பீடுகளை அவர்கள் மதிக்கவில்லை என்றால், அவர்கள் தாராளமாக இந்நாட்டை விட்டு வெளிஏறி, வேறு ஏதாவது நாட்டில் குடியேறலாம்.
இத்தகைய 'பாதுகாப்பற்ற' மக்கள் மீது குண்டுவீசி தாக்குவதற்கு என்று அரசு எனக்கு தனியாக ஒரு அமைச்சரவையை ஒதுக்க வேண்டும்.
அவர்கள் யாரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.