புது தில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடி அவசரம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது.
எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்; அதுவரை, அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடி அவசரம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடபாக வியாழன் அன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஏன் பிரதமர் அத்தனை அவசரமாக சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்ய துடிக்கிறார்? ஏன் அவர் சிபிஐ இயக்குநரை தேர்வுக் குழு முன் ஆஜராகி தனது தரப்பைச் சொல்ல அனுமதிக்கக் கூடாது? பதில்: ரஃபேல்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராகுல், 'ரஃபேலிடம் இருந்து பிரதமர் மோடியை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.