புது தில்லி: சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, ஞாயிறன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
சீக்கிய மதத்தில் பத்தாவது குருவாக போற்றி வணங்கப்படுபவர் குரு கோபிந்த் சிங். இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே சீக்கியர்களின் தலைவரான பெருமை கொண்டவர். பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்த நாள் ஞாயிறன்று சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம் ஒன்றை தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவரை வணங்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.