காஜியாபாத்: நம் மீது விரோதம் இருந்தாலும் நம்முடன் போர் புரியும் அளவுக்குத் தகுதியில்லாத நாடு என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாகச் சாடியுள்ளார்.
மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பொன்விழா ஆண்டு விழா ஞாயிறன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது, மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அதன்பின் நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டதெல்லாம் போதும்,போதும். இனியும் நம்மால் பாதிக்கப்படும் வகையில் நாம் இருக்க முடியாது.
நமது அண்டை நாடு விரோதத்துடன் நம்மை நோக்கும் அதேநேரம் உள்நாட்டில் சில சக்திகள் அவர்களுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டும் நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
நமது அண்டை நாடு நம்மீது மிகவும் விரோதத்துடன் இருந்தாலும், அவர்கள் நம்முடன் போர் புரியும் அளவுக்கு எல்லாம் தகுதியில்லாதவர்கள். இதுபோன்ற கடினமான நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு என்பது சவாலான விஷயம். ஆனால், அதை சிஐஎஸ்எப் படையினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்,
சுதந்திர இந்தியாவின் பல்வேறு கனவுகளை நிறைவேற்ற சிஎஸ்ஐஎப் முயற்சிகள் நடவடிக்கைகள் முக்கியமானது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.