இந்தியா என்பது பல்வேறு மத, மொழி, கலாசார மக்களைக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இலட்சியத்தோடு வாழும் மக்களைக் கொண்டது.
இங்கே மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடு இருந்தாலும் மனங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அதே சமயம் பல்வேறு காலக்கட்டத்தில் இதே வேற்றுமை சார்பாக வன்முறைகள் நடந்திருக்கிறதே என்று கூறலாம். அவை அனைத்துக்கும் பின்னணியில் ஏதோ ஒரு அமைப்போ அல்லது உள் நோக்கமோ இருக்குமே தவிர, பொது மக்களின் நேரடி தொடர்பு இருந்திருக்க வாய்ப்பில்லை.
சரி இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்று கேட்கலாம்.. அதாவது, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம், புதிய மசூதி கட்ட வஃக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கவும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டது. காவல்துறை, துணை ராணுவத்தினர் என பல்வேறு பாதுகாப்புப் படைகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்தினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகும், இந்த பாதுகாப்புகள் தொடர்ந்து உச்ச கட்டத்திலேயே இருக்கிறது. இந்த தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அயோத்தி தீர்ப்பையொட்டி, இந்து தோழருக்கு தனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் முஸ்லிம் சகோதரரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. இருவரும் ஹூப்ளி சந்தையில் அருகருகே கடை நடத்தி வருகிறார்கள்.
இவர்களே இன்றைய இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிக்கும் குடிமகன்களாக விளங்குகிறார்.
இவர்களுக்கு வைப்போம் ஒரு சல்யூட்.