ஹைதராபாத்: குவைத், சௌதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,000 பேர் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியுறவு விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் கடும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது 2014ம் ஆண்டு முதல் அரபு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற 33,988 இந்தியர்கள் மரணம் அடைந்திருப்பதாகவும், 2019ம் ஆண்டில் மட்டும் 4,823 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறுகிறது அந்த புள்ளி விவரம்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முரளிதரன், அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இந்தியர்களே அதிகளவில் மரணம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதில், மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தெலங்கானாவைச் சேர்ந்தவர்களே வெளிநாடுகளில் அதிகளவில் மரணத்தை தழுவியிருப்பதும், இது கடந்த 5 ஆண்டுகளில் 1,200 ஆக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடன் தொல்லை, பணியில் மன அழுத்தம், ஊதியம் வழங்கப்படாமை, சட்டச் சிக்கல்கள் என பல்வேறு காரணங்களால், பல இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதும், மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.