மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாமல்லபுரம் வந்தார். இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான முதற்கட்ட சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக கோவளத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் சந்திக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பினார். பிரதமர் மோடியும் கோவளத்தில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை கடற்கரையோரம் நடை பயணம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, கடற்கரையில் நிறைய குப்பைகள் இருந்ததால், அவர் அதைத் தனது கைகளால் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்கள் மேற்கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்த குப்பைகளுள் பெரும்பாலானவை பிளாஸ்டிக் குப்பைகளாகவே இருந்தன.
இதையடுத்து, தான் அகற்றிய குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தோளில் சுமந்தபடி, ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்படைத்தார். கையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலே பிரதமர் மோடி இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான 3 நிமிடங்கள் கொண்ட விடியோ காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்தே, நமது இடத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.