மாட்டிறைச்சி விவகாரத்தில் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்ற முறையை பாஜக அரசு பின்பற்றாதது ஏன்? கோவா மாநில காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசுவதை, பசு கடத்துதல், மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதே நேரத்தில் கேரளா, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் மாட்டுக்கறி உண்கின்றனர். கேரளாவில் மாட்டுக்கறி விழா என்ற ஒரு திருவிழாவே நடத்தப்படுகிறது. ஏன், பாஜக கூட தேர்தல் வாக்குறுதியில், கேரள மக்களுக்கு மாட்டிறைச்சி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியது நினைவிருக்கலாம்.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், மாட்டிறைச்சி விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, 'கேரளா, கோவா மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடையில்லை என்றும் வடமாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பது தண்டனைக்குரியது என்றும் இடத்திற்கேற்ப கொள்கைகளை மாற்றுகிறது.
அப்படியென்றால் மாட்டிறைச்சி விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பாதிக்கப்படுகிறார்களா? நாட்டில் அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு தானே பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவினர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.
மற்ற விஷயங்களில் எல்லாம் 'ஒரே நாடு; ஒரே கொள்கை' என்பதை பின்பற்றும் பாஜக அரசு மாட்டிறைச்சி விவகாரத்திலும் அதனைப் பின்பற்ற வேண்டும்' என்று பேசியுள்ளார்.