ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து, வரும் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் அவரை அடைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ப.சிதம்பரத்தை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், உரிய காலம் வரும்போது அவர் கைது செய்யப்படுவார் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறையின் வாதத்துக்கு ப.சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ப.சிதம்பரத்துக்கு இழுக்கு விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்ட சூழ்ச்சியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபடுவதாக அவரது தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார், மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.