ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.30,000 கோடியை இடைக்கால ஈவுத்தொகையாக மத்திய அரசு கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும். இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வரி வருவாய் மிதமான அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அரசு நிதியினத்தில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும்.
2019-20-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதம் என்ற இலக்கில் கட்டுக்குள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு ஏதுவாக தேவைப்படும்பட்சத்தில், ரிசர்வ் வங்கியிடமிருந்து நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.25,000-30,000 கோடியை வழங்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கியிடமிருந்து ஈவுத்தொகை பெறுவது தவிர, தேசிய சிறு சேமிப்பு நிதியை திறம்பட பயன்படுத்திக் கொள்வது, பங்கு விலக்கல் ஆகிய முறைகளிலும் நிதி திரட்ட மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி சார்பில் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. 2017-18இல் இந்த தொகை ரூ.10,000 கோடியாக இருந்தது.
கடந்த மாதம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான குழு, ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு அளிப்பதற்கு ஒப்புதல் அளித்து என்பது குறிப்பிடத்தக்கது.