

புபனேஸ்வர்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விற்பனை செய்யப்படாது என அம்மாநில எரிபொருள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 6771 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 228 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனொரு பகுதியாக இனி வீட்டைவிட்டு வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வரவேண்டும்; இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஓடிஸா மாநில அரசு வியாழானன்று கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விற்பனை செய்யப்படாது என அம்மாநில எரிபொருள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில எரிபொருள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்தா வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘அரசின் முடிவு முழுக்கவே பொதுமக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது; அதனை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எனவே அரசின் முடிவை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்துள்ளோம். இதன் காரணமாக எங்களது ஊழியர்களின் நலமும் காக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.