

புணே: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிக மக்கள் நெருக்கடி கொண்ட குடிசைப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அளிக்கலாமா என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
கரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுடன் இருந்தவர்களுக்கு முதற்கட்டமாக இந்த மாத்திரையை அளிக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மும்பையின் தாராவி குடிசைப் பகுதிகளில் கரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த மாத்திரைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், மலேரியா காய்ச்சலுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவில் கரோனா தொற்றைக் குணப்படுத்த இந்த மருந்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தாராவி போன்ற கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த மருந்தை தடுப்பு மருந்தாகக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தாராவியில் மட்டும் புதிதாக 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,090 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.