தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு கரோனா தடுப்புப் பணியில் இணைந்த விஞ்ஞானி

தெலங்கானாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு வந்து கரோனா தொற்றுக்கான சோதனைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.  

News image

கரோனா பரிசோதனை

Updated On :13 ஏப்ரல் 2020, 10:37 am

லக்னௌ: தெலங்கானாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு வந்து கரோனா தொற்றுக்கான சோதனைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.  

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 9240 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 331 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு வந்து கரோனா தொற்றுக்கான சோதனைப் பணியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.  

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள ஜார்ஜ் மன்னர் மருத்துவக் கல்லூரியில் நுண் உயிரியல் பிரிவில் பி.ஹெச்டி பயின்று வந்தார். தனது ப்ராஜெக்டை ஆறு மாதங்களுக்கு முன்பு முடித்த அவர் சொந்த ஊரில் அவரது பெற்றோர்ர்களுடன் விவசாய வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த நிலையில்தான் கடந்த மாதம் அவரது கல்லூரியின் நுண் உயிரியல் பிரிவுத் தலைவர் அமிதா ஜெயினிடம் இருந்து அவருக்கு போன் வந்துள்ளது. அதில் தற்போது கரோனா நோய்த்தொற்று தொடர்பாக நிறைய மாதிரிகள் சோதனைக்கு வருவதாகவும், அவற்றை சோதனை செய்யும் பணியில் ராமகிருஷ்ணனது உதவி தேவை என்றும் கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்றுத் தான் அங்கு வருவதாக ராமகிருஷ்ணண் உறுதி தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் தனது பெற்றோரிடம் ஹைதராபாத்தில் பயிலும் தனது நண்பர்கள் சிலருடன் தங்குவதாகக் கூறி விட்டு, கடந்த மாதம் 22-ஆம் தேதி ஹைதராபாத் வந்து, அங்கிருந்து மிகுந்த சிரமத்திற்கு இடையில், காவல்துறை உள்ளிட்டோரின் உதவியுடன் லக்னௌ வந்து சேர்ந்துள்ளார். அதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நோய்த்தொற்று சோதனைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்தப் பணிகுறித்து நுண் உயிரியல் பிரிவுத் தலைவர் அமிதா ஜெயின் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தகவலைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.   

இதுபற்றி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘அவருக்கு யார் இந்தத் தகவலை கூறினார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு இது மகிழ்சியாக உள்ளது. என் பெற்றோருக்கும் பின்னர் தகவல் தெரிந்து அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.