ஜம்மு-காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டாவது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், த்ரிஷுல் மோத்தா, பாட்டியல் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அஜய் ஆனந்த், பானிஹால் மற்றும் ராம்பன் பகுதிகளில் அதிக அளவிலான நிலச்சரிவு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சிறிது நேரம் கழித்து நேற்று 150க்கும் அதிகமான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும் அதிக அளவிலான நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் உள்ள பாறைகளை அகற்றி மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிக அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுவதால், மறுசீரமைப்புக்கு முழுவதுமாக ஒருநாள் தேவைப்படும்.
தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், சாலையில் இருபுறங்களிலும் சுமார் 3,000 வாகனங்கள் அணிவகுத்து நின்றன.