

தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டத்தில் போர்வெல் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் செவெல்லா மண்டலத்தில் உள்ள மல்காபூர் கேட் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பலியானவர்கள் அனைவரும் ஹைதராபாத்தின் தாட்பன் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் கர்நாடகாவில் உள்ள குர்மித்கலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இன்னோவா வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பயணித்தனர். கார் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த் திசையிலிருந்து வந்த போர்வெல் லாரி மீது மோதியது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆசிப் கான் (50), நாசியா பேகம் (45), சானியா (18), அர்ஷா (28), நாசியா பானு (36) மற்றும் ஆறு வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 5 பேர் காயமடைந்து அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக செவெல்லாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்தால் ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு கி.மீ வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தைச் சரிசெய்தனர்.
மேலும், அதிக வேகம் மற்றும் மூடுபனியை விபத்து ஏற்படக் காரணம் என்று காவல்துறை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.