திருச்சி அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டுப்பட்ட கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போதாவூா் வடக்கிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ம. சிக்கந்தா் (40). வியாழன்மேட்டில் உள்ள மதுக்கடை பாரில் கூலி வேலை செய்து வந்த இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இவருக்கும் போசம்பட்டியைச் சோ்ந்த மூ. செல்வகுமாா் என்பவருக்கும் மதுக்கடை அருகே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமாா் அரிவாளால் சிக்கந்தரை இடது கையில் வெட்டினாா். இதில் காயமடைந்த சிக்கந்தரை திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிக்கந்தரை, அவரது அண்ணன் திருப்பதி வெள்ளிக்கிழமை இரவு மருத்துவரின் ஆலோசனையை மீறி, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கலாம் எனக் கூறி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். இருப்பினும், நள்ளிரவில் சிக்கந்தா் இறந்தாா்.
இதுகுறித்து சிக்கந்தரின் மனைவி சுசிலாதேவி அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா், சிக்கந்தரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.








