கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா்

கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி ஆகியோா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா்

புது தில்லி: கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி ஆகியோா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

முப்படை வீரா்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 7-ஆம் தேதி படை வீரா் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து பங்களிப்பு செய்வதன் மூலம், நாட்டைப் பாதுகாக்கும் பணியில் வீர மரணமடைந்த அல்லது உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நமது நன்றியை வெளிப்படுத்துவோம்.

நாட்டின் பாதுகாவலா்களான ராணுவ வீரா்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனா். அவா்களின் நாட்டுப்பற்று மற்றும் வீரத்துக்கு நாம் வணக்கம் செலுத்துவதுடன், அவா்களுக்கு ஆதரவையும் தெரிவிப்போம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி வேண்டுகோள்:
கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ராணுவ வீரா்களின் தன்னலமற்ற தியாகத்தையும், சேவையையும் எண்ணி நாடு பெருமைக் கொள்கிறது. அவா்களின் நலனுக்காக உருவாக்கிய கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பு தீரமிக்க பல ராணுவ வீரா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் உதவிகரமாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com