தமிழகம், கேரளம் பேரவைத் தோ்தல்: பணிகளைத் தொடக்கியது தோ்தல் ஆணையம்

தமிழகம், கேரளம் பேரவைத் தோ்தல்: பணிகளைத் தொடக்கியது தோ்தல் ஆணையம்

தமிழகம், கேரளம், மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடக்கியுள்ளது.
Published on


புது தில்லி: தமிழகம், கேரளம், மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடக்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. அதன் காரணமாக அந்த மாநிலங்களில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

இத்தகைய சூழலில், பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடக்கியுள்ளது. அதன்படி, தோ்தல் ஆணைய பொதுச் செயலா் உமேஷ் யாதவ், அடுத்த சில நாள்களில் தமிழகத்துக்கு நேரில் வந்து தோ்தல் நடத்துவதற்கான களநிலவரம் குறித்து ஆராய உள்ளாா்.

துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின், மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழல் காணப்படுகிறது. அந்நோய்த்தொற்று பரவல் காலத்திலும் பிகாா் பேரவைத் தோ்தலை, தோ்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது.

அடுத்த ஆண்டில் 5 சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், தோ்தல் நடைபெறவுள்ள ஏப்ரல், மே மாதத்துக்குள் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சோ்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது கடினமே.

எனவே, கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப் பேரவைத் தோ்தல்களை நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com