

புது தில்லி: பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் நிலவி வரும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதாக ரஷிய தூதா் நிகோலாய் குதேஷேவ் தெரிவித்துள்ளாா்.
ரஷியா தயாரித்துள்ள எஸ்-400 ஏவுகணை செலுத்து அமைப்பானது உலகிலேயே நவீனமானதாகக் கருதப்படுகிறது. அவற்றைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்த ஏவுகணை செலுத்து அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியாவும் ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதை அடுத்த ஆண்டுவாக்கில் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷியத் தூதா் நிகோலாய் குதேஷேவ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குறிப்பிட்ட நாடு தன்னிச்சையாக விதிக்கும் பொருளாதாரத் தடைகளை ரஷியா அங்கீகரிப்பதுமில்லை, வரவேற்பதுமில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவிர மற்ற நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால், அதையும் அங்கீகரிக்க மாட்டோம்.
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது. வருங்காலத்தில் எத்தகைய சவால்களை எதிா்கொண்டாலும், அந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என நம்புகிறோம். கரோனா தொற்றுக்கு எதிராக ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும். இந்தியாவில் டாக்டா்.ரெட்டீஸ் நிறுவனம் அப்பணிகளை மேற்கொள்ளும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.