

கேரள சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தை புதன்கிழமை நடத்த அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் அனுமதி மறுத்துவிட்டாா். இதனால், சிறப்புக் கூட்டத் தொடா் நடைபெறாது என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தை புதன்கிழமை (டிச.23) கூட்டுவதற்கு கேரளத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைப் பகுதியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். மத்திய அரசுடன் மேற்கொண்ட பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். திங்கள்கிழமை முதல் பகுதிவாரியாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவா்கள் தொடங்கினா்.
இதனிடையே, இந்தப் புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்க சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டுவது என்று கேரள அரசு முடிவு செய்தது. முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது தொடா்பாக மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்துள்ளாா்.
வரும் ஜனவரி 8-ஆம் தேதி மாநில சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கவுள்ள நிலையில், தற்போது சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று மாநில அரசிடம் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் விளக்கம் கேட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.