திவால் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேலும் மூன்று மாதங்களுக்கு (2021 மாா்ச் 24 வரை) நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக தேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பல்வேறு தொழில்கள் முடங்கின. இதனால், வங்கிக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்த முடியாத நிலை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திவால் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது.
அதன் பிறகு கடந்த செப்டம்பா் மாதம் இது தொடா்பாக திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்துக்கு பிறகு திவாலான நிறுவனங்கள் மீது குறைந்தது 6 மாதங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில் இருந்து மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அதனை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.