இமாசலில் உள்ள இந்தியாவின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையில் நடனமாடி அதனை விடியோ எடுத்து பதிவிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இமாச்சல்பிரதேசத்தின் மணாலியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைத்தார். ரோட்டங் பகுதியில் 9.02 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள சுரங்கப்பாதை ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடல் சுரங்கப் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் அடல் சுரங்கப் பாதையின் பாதி வழியில் நின்று உரத்த இசைக்கு நடனமாடிய ஏழு சுற்றுலாப் பயணிகளை காவல்துறை கைது செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் சுரங்கப்பாதையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.