

மேற்கு வங்க ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டாவின் மேற்குவங்க பயணத்தின்போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுவதாகவும் முதல்வர் மம்தா தலைமையிலான அரசு அமைதியைக் காக்கத் தவறியதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.
இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் முதல்வர் மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு மம்தா ஒரு முதலாளி போல் செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியலமைப்பு விதிகளை பாதுகாக்க மேற்கு வங்க ஆளுநரை பதவிநீக்கம் செய்யக் கோரி திரிணமூல் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டு, ஆளுநர் தங்கர் பிளவுபடுத்தும் அரசியலைத் தூண்டி வருகிறார் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ரே எழுதிய கடிதத்திற்கு சுதீப் பாண்டியோ பாத்யாய், டெரெக் ஓ பிரையன், கல்யாண் பானர்ஜி மற்றும் ககோலி கோஷ் தஸ்திதர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.