/

இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமானது: லடாக்கில் பிரதமர் மோடி உரை

இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமானது என்று லடாக்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

News image

இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமானது

Updated On :3 ஜூலை 2020, 10:15 am

லடாக்: இந்திய வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமானது என்று லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் அருகே லே என்ற இடத்தில் நிம்மு ராணுவ முகாமில், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

Story image

அப்போது அவர் கூறியதாவது, இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தைரியம், உலகளவில் இந்திய வீரர்களின் வீரம் என்ன என்பதைக் காட்டியுள்ளது. நீங்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் மலையை விட உயரமானது உங்களது வீரம். இந்திய ராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகரானது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. 

நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்கள் கையில்தான் உள்ளது. ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒருபோதும் நாடு மறக்காது என்று மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் எதிரிகள் உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பார்த்திருப்பார்கள். லேஹ் முதல் லடாக், சியாச்சின் மற்றும் கார்கில்.. கல்வான் பள்ளத்தாக்கின் குளிர்ச்சியான நீர் பரப்பு.. அனைத்து மலைகளும் ஒவ்வொரு சிகரமும் இந்திய வீரர்களின் வீரத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளன. நமது எல்லைப் பரப்பைக் கைப்பற்ற முயன்றவர்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்பும் என்பதை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர், யார் ஒருவர் பலவீனமாக இருக்கிறார்களோ அவர்கள் எப்போதும் அமைதியை முன்னெடுப்பதில்லை, மாறாக தைரியமும், துணிச்சலும் கொண்டவர்கள்தான் முதலில் அமைதியை முன்னெடுக்கிறார்கள் என்றும் கூறினார்.
 

லடாக் பகுதியில் நிலைமைகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் அங்குச் சென்றார். 

Story image

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் 15 தேதி இரவு மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். 

இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே மோதல் நிகழ்ந்த சூழலில், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே கடந்த வாரம் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவணே ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று லடாக் சென்றுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.