தில்லியில் சுமார் 2,098 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாகியிருப்பதாக வடக்கு தில்லி நகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்களில் தில்லியும் ஒன்று. தில்லி அரசால் கடைசியாக வெளியிடப்பட்ட நேற்றைய (புதன்கிழமை) செய்திக் குறிப்பில், கரோனா தொற்றால் 984 பேர் பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுமார் 2,098 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி வடக்கு தில்லி நகராட்சி நிலைக் குழுத் தலைவர் ஜெய் பிரகாஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:
"தில்லியின் மூன்று நகராட்சிகளிலும், மார்ச் முதல் ஜூன் 10 வரை கரோனா தொற்றால் பலியான சுமார் 2,098 சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 200 பேர் கொொண்ட ஆவணங்களும் தனியாக வழங்கப்பட்டுள்ளது."