ஈரானில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரானில் அதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்கு கரோனா வைரஸுக்கு இதுவரை 35,408 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,517 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்திர்களும் சிக்கிக் கொண்டனர். ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவாக அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த சூழலில், 2ஆவது கட்டமாக மேலும் 275 இந்தியர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். 4 குழந்தைகள், 133 பெண்கள் மற்றும் 142 ஆண்கள் என மொத்தம் 275 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்படுகின்றனர். முன்னதாக கடந்த 25ஆம் தேதி ஈரானில் இருந்து 277 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.