

கோரக்பூர்: மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல இரண்டு சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அனுமதி அளித்தது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்துக்குத் திரும்ப இரண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு ரயில் பிவாண்டியில் இருந்து 1,145 பயணிகளை ஏற்றிக்கொண்டு 1.20 மணிக்கு கோரக்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது. மேலும், 982 பயணிகளுடன் வசாய் சாலை ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் சுமார் 5.30 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்தது என்று கோரக்பூர் துணை மாஜிஸ்திரேட் கௌரவ் சிங் சோகர்வால் கூறினார்.
பயணிகளில் அதிகமானவர்கள் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஜ்னி, பன்ஸ்கான் மற்றும் கோலா தெஹ்ஸில் இருந்து வந்தவர்கள் என்றார்.
மேலும், ரயில் நிலையத்தை அடைந்ததும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே உ.பி. அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளில் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த மார்ச் 25 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்களை அழைத்து வருவதற்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.